ARTICLE AD BOX
மானாமதுரை அருகே உள்ள முருகன் கோவிலில், தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 70 வயது முதியவரும், மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள டோகோ நாட்டைச் சேர்ந்த 60 வயது வணிகரும், பாரம்பரிய தமிழ் முறையில் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாயமங்கலம் சாலையில் அமைந்துள்ள நவத்தாவு அழகாபுரி நகர் முருகன் கோவிலில், தெற்கு பிரான்ஸ் நாட்டின் மோண்ட்பெல்லியர் நகரத்தைச் சேர்ந்த யுவெஸ் அர்னெய்ல் லே (70) மற்றும் டோகோ நாட்டின் தலைநகரான லோமைச் சேர்ந்த ஜூலியென் சரெளனா லே (60) ஆகிய இருவரும், தமிழர் திருமண முறையின்படி மாலை மாற்றி, தாலி கட்டி, மெட்டி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமண விழாவிற்குப் பிறகு, மணமக்கள் மானாமதுரை - தாயமங்கலம் சாலையில் அமைந்துள்ள முத்துராமலிங்கபுரம் அருகே, யுவெஸ் அர்னெய்ல் லே தனது நண்பரின் தோட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட மகிழ்ச்சியான விருந்துவிழா ஏற்பாடு செய்தனர். அ.விளாக்குளம், முத்துராமலிங்கபுரம், பீக்குளம், மேல பிடாவூர், பிள்ளத்தி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மொழி, நாடு, இனம், வயது என எந்த எல்லைகளையும் தாண்டி நடத்தப்பட்ட இத்திருமணம், அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.