ARTICLE AD BOX
மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா்செல்வம் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரை இன்று தூக்கிலிட சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா். இதனிடையே, பன்னீா்செல்வத்துக்கு தெரியாமலேயே அவர் மூலம் ஹெராயின் கொடுத்தனுப்பப்பட்டது என்பதால் அவரை தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது.
தொடர்ந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டங்களை நடத்தினர். பன்னீர்செல்வத்தின் மரண தண்டனையை நிறுத்திவைக்க கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. போதைப் பொருள் வழக்குகளில் மரண தண்டனை விதிப்பதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், பன்னீர்செல்வம் நேரடியாக குற்றச்செயலில் ஈடுபடாததாலும் தண்டனையை நிறுத்திவைக்குமாறு வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பன்னீர்செல்வத்தின் தண்டனையை நிறுத்திவைக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசு, கடந்த அக்டோபர் 1, 2024 முதல் பிப்ரவரி 7, 2025 வரை ஒன்பது மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளது. இதில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் எட்டு பேர் அடங்குவர். 2023ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான மரண தண்டனைகள் பதிவாகியுள்ள ஐந்து நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.