ARTICLE AD BOX
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 16ஆவது சர்வதேச பெங்களூரு திரைப்பட விழாவை, டி.கே.சிவகுமார் தொடங்கி வைத்தார். அப்போது, நிகழ்சிக்கு குறைவான நட்சத்திரங்களே வந்திருந்ததால் அதிருப்தியடைந்த அவர், ”இது ஒன்றும் எனது வீட்டு விழாவோ, முதல்வர் வீட்டு விழாவோ அல்ல” என்றார். ”சினிமா நட்சத்திரங்களே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டால், வேறு யார் பங்கேற்பார்கள்” என வினவிய அவர், ”அரசு ஆதரவளிக்கவில்லை என்றால் திரைப்படங்கள் உருவாகாது எனவும், விதிமுறைகள் கடுமையாக்கப்படும்” எனவும் எச்சரித்தார்.
”மேகதாது விவகாரத்தில் நடைபெற்ற பாத யாத்திரைக்கும் திரைப்பட நடத்திரத்திரங்கள் ஆதரவளிக்கவில்லை” என குறிப்பிட்டார்.
ஆனால் டிகே சிவகுமாரின் கருத்துக்கு நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா (திவ்யா ஸ்பந்தனா) ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், “டி.கே.சிவகுமார் பேசியதில் முற்றிலும் தவறில்லை. நடிகர்களாக நாம் பொதுமக்களிடம் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். மேலும் நாம் விரும்பும் காரணங்களுக்காக நாம் குரல் கொடுப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், டி.கே.சிவகுமார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் அசோகா, திரைப்படத்துறையினரை அவர் மிரட்டுவதாக விமர்சித்துள்ளார். “சிவகுமார் தனது கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். இருப்பினும் இதற்கு எதிர்வினையாற்றிய சிவகுமார், தான் உண்மையையே பேசியதாக கூறியுள்ளார்.