ARTICLE AD BOX
ஃபாஸ்டேக் இருக்கா? அப்போ வாகன ஓட்டிகள் இந்த விஷயத்தில் கவனமாக இருங்க.. ஏன்?
சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல், உடனுக்குடன் சுங்கக் கட்டணத்தை செலுத்த ஃபாஸ்டேக் (FASTag) பெரிதும் பயன்படுகிறது. அதாவது பாஸ்டேக் வசதி மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் நிறுத்தாமல், விரைவாகக் கட்டணம் செலுத்திக் கடந்து செல்ல அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் உங்கள் வாகனம் எந்த சுங்கச்சாவடியையும் கடந்து இருக்காமல், வீட்டிலேயே நிறுத்தப்பட்டு இருந்தாலும் உங்கள் பாஸ்டேக் வாலாட்டிலிருந்து பணம் குறைந்துள்ளதா. இனி இந்த பிரச்சனை இருக்காது. அதாவது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதற்கு ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பயனர்கள் சிலர் தவறுதலாக தங்களுடைய கணக்குகளில் இருந்து அடிக்கடி பணம் எடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் புகார்கள் கூட கொடுத்துள்ளனர். இந்த புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தான் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி நடத்தும் நிறுவனங்களுக்கு அபராதத்தை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அபராத தொகை அதிகமாக இருப்பதால் சுங்கச்சாவடி நடத்தும் நிறுவனங்கள் தவறுதலாகப் பணம் எடுக்கும் நிகழ்வுகள் குறைந்துவிட்டன என்று கூறப்படுகிறது. ஆனாலும் சுங்கச்சாவடியைப் பயன்படுத்தாமலேயே பாஸ்டேக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் மக்கள் உடனே புகார் அளிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் பயனர்களின் பாஸ்டேக் கணக்கில் இருந்து ஒருவேளை தவறுவதலாக பணம் எடுக்கப்பட்டிருந்தால் 1033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உடனே மின்னஞ்சல் அனுப்பலாம்.
குறிப்பாக நீங்கள் கொடுத்த புகார் தொடர்பாக விசாரித்து தவறுதலாகப் பணம் எடுக்கப்பட்டது உண்மை என்றால் உடனடியாக அந்த கணக்கிற்கு பணம் திரும்பி அனுப்பப்படும் என்றும் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியை நடத்தும் நபர்களுக்கும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் பாஸ்டேக் கணக்கில் தவறுதலாகப் பணம் எடுக்கப்பட்டது உண்மை என்றால் உடனே புகார் கொடுப்பது நல்லது.
அதேபோல் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, FASTag கணக்கில் இருப்பு இல்லாமல், டோல் பிளாசாவிற்குள் நுழையும் வாகனங்களுக்கு இனி ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் வழங்கப்படும். இப்போது இரட்டிப்பு கட்டணங்களை உடனே வசூலிப்பதற்கு பதிலாக,
NHAI உங்களுக்கு 60 நிமிட கால அவகாசத்தை வழங்குகிறது. FASTag பேலன்ஸ் இருப்பு இல்லாமல் டோல் கேட்டில் இருக்கும் வாகனங்களின் FASTag கணக்கு லோ-பேலன்ஸ் கார்டு என்று அடையாளம் குறிக்கப்படும்.

குறிப்பாக 60 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் ஒரு SMS அல்லது மொபைல் ஆப்ஸ் நோட்டிபிகேஷனை நீங்கள் பெறுவீர்கள். உடனே ரீசார்ஜ் செய்து கட்டணத்தை செலுத்தினால், வழக்கமான டோல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். ஒருவேளை 60 நிமிடங்களுக்குள் இதைச் செய்யத் தவறினால், வெளியேறும் போது டோல் கட்டணத்தை இரு மடங்கு செலுத்த வேண்டும்..
உதாரணமாக டோல் கட்டணம் ரூ. 100 ஆக இருந்தால், ஒரு மணி நேரத்திற்குள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், உங்களிடமிருந்து ரூ.200 வசூலிக்கப்படும். டோல் ப்ளாஸாக்களுக்குள் நுழைவதற்கு முன்பு ஓட்டுநர்கள் போதுமான இருப்புத் தொகையை பராமரிப்பதை உறுதிப்படுத்தி, நெரிசலைக் குறைப்பதே இந்த விதியின் நோக்கமாக இருக்கிறது.