ARTICLE AD BOX
அவினாசியை அடுத்த துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 85). விவசாயி. இவரது மனைவி பர்வதம் (75). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகன், மகள்கள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இதனால் தோட்டத்து வீட்டில் தம்பதிகள் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இவர்கள் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் தம்பதியை கொலை செய்தது அவர்களது தோட்டத்து வீட்டிற்கு பக்கத்தில் வசித்து வரும் பழனிசாமியின் உறவினரான ரமேஷ் (43) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கலெக்டர் உத்தரவுப்படி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.