ARTICLE AD BOX
ஆடு ஜீவிதம், ராயன், காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களுக்கு பிறகு கமல்ஹாசனின் தக் லைஃப், தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் என அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்கும் பணியில் பிஸியாக இருந்துவருகிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.
இந்த சூழலில் ரஹ்மானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் உண்மையில் ஏஆர் ரஹ்மான் உடலுக்கு என்ன பிரச்னை என்பது குறித்து அவருடைய மகன் அமீன் விளக்கமளித்துள்ளார்.
நெஞ்சுவலியா? என்ன பிரச்னை?
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அபோலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவருக்கு முதலில் நெஞ்சு வலி எனவும், பின்னர் கழுத்துவலி எனவும் அடுத்தடுத்த தகவல்கள் பகிரப்பட்டன.
இந்நிலையில் உண்மையில் என்ன நடந்தது? ஏஆர் ரஹ்மானுக்கு என்ன பிரச்னை? என்பது குறித்து அவருடைய மகன் அமீன் விளக்கமளித்துள்ளார். சமூகவலைதளங்களில் அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தில், “அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், உங்களுடைய அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். என் தந்தை நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சற்று பலவீனமாக இருந்தார், அதனால் நாங்கள் எப்போதும் போல சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வார்த்தைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். அனைவருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்!” என்று பதிவிட்டுள்ளார்.
ஏஆர் ரஹ்மான் உடல் பரிசோதனை முடித்துவிட்டு வீடு திரும்பிவிட்டதாக மருத்துமனையும் விளக்கமளித்துள்ளது.