ARTICLE AD BOX
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந்தில்குமார். கடந்த 15 நாள்களாக தக்காளிகளை அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறிச் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்துவந்துள்ளார்.
கடந்த 2 நாள்களாக 15 கிலோ கொண்ட பெட்டி ரூ. 100 விற்பனையானதால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலரும் பரிதவிப்புக்கு ஆளாகினர். தக்காளி பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாடகை உள்ளிட்டவைகளுக்கு கூட கட்டுப்பாடியாகமல் இருந்தது. இந்நிலையில், செந்தில்குமார் தான் இரண்டு ஏக்கரில் பயிரிட்டிருந்த தக்காளி முழுவதையும் டிராக்டர் மூலம் அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சத்துக்கும் படுபாதாளத்துக்கும்!
இதுகுறித்து செந்தில்குமாரிடம் கேட்டபோது, "எங்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் தக்காளி, சின்னவெங்காயம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் தக்காளிக்கு விலையில்லாத பிரச்னை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
திடீரென்று தக்காளி விலை உச்சத்துக்கு செல்வதும், திடீரென்று படுபாதாளத்துக்கும் செல்கிறது. நிலையான விலை இல்லாததால், தக்காளி பயிரிடும் விவசாயிகள் பலர் இதை விட்டு வெளியேறிவிட்டனர். ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் இரண்டு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்து தக்காளி பயிரிட்டிருந்தேன். அழிப்பதற்காக தக்காளி விவசாயம் செய்யவில்லை. இரண்டு மாதகாலமாக தக்காளி பயிரைக் காப்பாற்ற பல சிரமங்களைச் சந்தித்து வளர்த்து வந்தேன்.

தற்போது, அறுவடை செய்யும் நிலையில், வெளிமாநில தக்காளி வரத்தால் இங்கு விளையும் தக்காளி விலை போகவில்லை. 15 கிலோ கொண்ட பெட்டி ரூ. 100 விற்பனையானகிறது. பறிப்பு கூலி, வண்டி வாடகை, இடைத்தரகர்கள் கமிஷன் போக ஒரு கிலோவுக்கு ரூ.1.50 பைசாதான் மிஞ்சுகிறது. இதனால், கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறேன். இதனால், எங்கள் கிராம மக்களுக்கு தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை இலவசமாக அளித்தேன். மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டேன்.
மீதமுள்ள தக்காளியை டிராக்டர் மூலம் அழித்துவிட்டேன். தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க, விவசாயிகளை அரசு பாதுகாக்கும் வகையில் தக்காளிக்கென்று குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்ற விவசாயி தக்காளிக்கு போதிய விலை இல்லாதநிலையில் தனது தோட்டத்தில் டிராக்டர் மூலம் அழித்த சம்பவம்போல் மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது திருப்பூர் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
