ARTICLE AD BOX
ஜலாவர்,
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கலுலால் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அதில் தண்ணீர் வராததால் அதை மூட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் கலுலால் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் பிரகலாத் (5 வயது) அதில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சிறுவன் 32 அடி ஆழத்தில் சிக்கியுள்ள நிலையில் மயக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கியுள்ளனர். தொடர்ந்து சிறுவனின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.