ARTICLE AD BOX
புதுக்கோட்டை மாவட்டம் பிச்சாந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகணேஷ் (54 வயது). இவர் பள்ளியில் சிலம்பம் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் கபடி விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் நேற்று, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. அதில் தனது அணி சார்பில் சிவகணேஷ் பங்கேற்று விளையாடினார்.
விளையாடி கொண்டிருந்தபோது சிவகணேசுக்கு திடீரென மயக்கம் வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கினார். அவரை சக வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிவகணேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.