ARTICLE AD BOX
புதுடெல்லி,
பா.ஜ.க.வின் "மக்கள் விரோத" கொள்கைகளால் ஏற்படும் சவால்கள், அரசியலமைப்பின் மீதான தாக்குதல் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 8-ந் தேதி குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 8-ந் தேதி விரிவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9-ந் தேதி கட்சி பிரதிநிதிகள் கூட்டமும் நடைபெறும். இந்த கூட்டம், மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் பா.ஜனதாவின் அரசியல் சாசனம் மற்றும் அதன் மதிப்புகள் மீதான இடைவிடாத தாக்குதல்களால் முன்வைக்கப்படும் சவால்கள் குறித்து விவாதிக்க நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரண்டு கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் அனைத்து முதல்-மந்திரிகள், தேசிய நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பிற காங்கிரஸ் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் வேணுகோபால் கூறினார்.