ARTICLE AD BOX
கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் நேற்றைய தினம் உலகெங்கும் இருக்கும் வைகுண்டர் பக்தர்களால் கொண்டாடப் பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் இது குறித்து வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் பிரதமர் மோடி இது தொடர்பாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என வருத்தப் படுகிறார்கள் வைகுண்டர் பக்தர்கள்.
இது குறித்து ’அய்யா வழி’ திரைப்படத்தை எடுத்தவரும் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகனிடம் பேசினோம்.
‘’வடக்க அம்பேத்கர் மாதிரி தென்னகத்துல சாதியை ஒழிக்கணும்னு போராடியவர் வைகுண்டர். நாத்திகவாதிகள் கூட அய்யாவுடைய சீர்திருத்தக் கருத்துகளை ஏத்துக்கிடுவாங்க. இங்க ஆயிரக்கணக்கான அய்யாவழி பதிகள் இருக்கு, அவரைப் பின்பற்றுகிற லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்காங்க. ஒவ்வொரு வருஷமும் மாசி மாசம் அவதார தினம் வரும். அதன்படி நேத்து கடைபிடிக்கப்பட்டது.

அம்மா முதல்வரா இருந்தப்ப சாமித்தோப்பு வந்து வழிபட்டிருக்காங்க. அதோட உள்ளூர் விடுமுறையையும் அம்மா ஆட்சியில இருக்கிறப்பதான் அறிவிச்சிருக்காங்க. இப்பவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இந்த நாள்ல விடுமுறை.
அய்யா வைகுண்டர் அவதார தினம்: "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே!" | பொன்மொழிகள்அம்மா சாமித்தோப்பு வந்துட்டு போன பிறகு தான் பல அரசியல் கட்சித் தலைவர்கள், விஐபிக்கள் இங்க வரத் தொடங்கினாங்க. நடிகை நயந்தாரா கூட திருமணத்துக்கு முன் இங்க வந்து வழிபட்டுட்டுப் போனது நினைவிருக்கலாம்.
ஆனா கருணாநிதி ஆட்சியில இருந்தவரை அவதார தினத்துக்கு வாழ்த்துச் சொன்னதில்லை. ஆனா இப்ப முதல்வர் வாழ்த்து சொல்றார். கொஞ்ச நாள் முன்னாடி உதயநிதி சாமித்தோப்பு போய் வந்தார். திமுக இதை ஓட்டுக்காகச் செய்யுதா தெரியலை, ஆனா திமுகவின் இந்த மாற்றத்தை அய்யா வழி பக்தர்கள் வரவேற்கிறாங்க’’ என்கிற அன்பழகனிடம் பிரதமர் வாழ்த்துச் சொல்லாதது குறித்துக் கேட்டோம்.
‘’பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துச் சொல்லியிருந்தார். ஆனா நாட்டை ஆள்கிற கட்சியா அது இருக்கிற சூழல்ல பிரதமர் கிட்ட இருந்து வாழ்த்து வந்திருக்கணும். மாநிலத் தலைமைதான் அவருக்குத் தகவல் தெரிவித்திருக்கணும். ஏன் செய்யாம விட்டாங்கனு தெரியலை. இதனால எங்க பக்தர்கள் வருத்தத்துல இருக்கிறது நிஜம்தான்’’ என்கிறார் இவர்.
"தாழக்கிடப்பாரைத் தற்காப்பதுவே தர்மம்" - அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தினவிழா!சென்னை மணலி பகுதியில் வசிக்கும் அய்யாவழி பக்தர்கள் சிலரிடம் பேசிய போது,
‘’என்னென்னவோ தினத்துக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லிட்டு வர்ற பிரதமர் இந்த வருஷ அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்கு வாழ்த்துச் சொல்லாதது எங்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கு.
கவர்னர் ஆர்.என்.ரவி கூட சமீபமா தொடர்ந்து அய்யா வைகுண்டர் நிகழ்ச்சியில ஆர்வமா கலந்துகிட்டு அவர் பத்தின பெருமைகளைப் பேசிட்டு வர்றார். ஆனா பிரதமர்கிட்ட இருந்து வாழ்த்துச் செய்தி கூட வரலைன்னா எப்படிங்க? மாநிலத் தலைமை விஷயத்தை பிரதமருக்கோ கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கோ கொண்டு போகலைன்னுதானே அர்த்தம்?

அதுவும் போன வருஷம் பிரதமர்கிட்ட இருந்து வாழ்த்து வந்தது. இந்த வருடம் வரலைன்னதும், ”அப்படீன்னா போன வருஷம் தேர்தல் நடந்ததால வாழ்த்துச் சொன்னாரா’னு எங்க பக்தர்கள் கேக்குறாங்க. அப்படிதானே நினைக்க வேண்டியிருக்கு.
தவிர திமுக அரசின் முதல்வர்கிட்ட இருந்தே வாழ்த்துச் செய்தி வர்றப்ப ஆன்மிகம் பேசற பாஜக தலைவர்கிட்ட இருந்தோ அல்லது பிரதமரிடமிருந்தோ வாழ்த்தை எதிர்பார்க்கறது நியாயமானதுதானே? அதனால இப்ப ரொம்பவே மன வருத்தத்துல இருக்காங்க அய்யாவழி பக்தர்கள்’’ என்றனர் வருத்தத்துடன்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
