ARTICLE AD BOX
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு சுமார் ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தினால் மாணவர்கள் கெட்டுப் போவதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “புஷ்பா போன்ற படங்களினாலும் சமூக வலைதளங்களாலும் மாணவர்கள் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். மாணவர்கள் பள்ளியில் மோசமாக நடந்து கொள்வதை பார்த்து நான் ஒரு ஆசிரியையாக தோல்வியடைந்தது போல் உணர்கிறேன். நாங்கள் படிப்பை மட்டும் தான் பார்க்கிறோம். இதை கவனிப்பதில்லை. இது அரசு பள்ளியில் மட்டுமில்லை தனியார் பள்ளிகளிலும் இதுதான் நிலைமை. பிள்ளைகளை கண்டிக்க வேண்டியது பெற்றோர்கள் தான். எங்களால் கண்டிக்க முடியாது. பசங்க இது போன்று மோசமடைவதற்கு சோசியல் மீடியாவும் சினிமாவும் தான் காரணம்” என்று எஜுகேஷன் கமிஷன் முன்னிலையில் ஆசிரியை குற்றம் சாட்டியிருப்பது பெரும் பேசும் பொருளாகியுள்ளது.