ARTICLE AD BOX
Palani woman police resignation | திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில்வே காவல்நிலையத்தில் முதுநிலை பெண் காவலராக பாணியாற்றிய பெண் காவலர் தன்னுடைய பணியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் தன்னுடைய ராஜினாமாவுக்கு உயர் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததை எதிர்த்ததே காரணம் என்றும், அதனால் பணியிடமாறுதல் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பாலியல் தொந்தரவுகளை எதிர்த்ததால் உயர் அதிகாரியால் பணி ரீதியாக பழி வாங்கப்பட்டேன் என்றும் அவர் குற்றம்சாட்டியிருப்பது காவல்துறை மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஆடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில்வே காவல்நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக முதல்நிலை பெண் காவலராக பெண் காவலர் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தற்போது திருச்சி ரயில்வே போலீசிற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பெண் காவலர் திருச்சி ரயில்வே எஸ்பிக்கு தன்னுடைய ராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன் ராஜினாமா செய்தது குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பழநி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளச்சாமி தன்னிடம் வரைமுறை தவறி பேசினார். அவரது ஆதரவில் பழநி ரயில்வே போலீசில் சிறப்பு எஸ்ஐ -ஆக பணிபுரிந்து வரும் மணிகண்டனும் தன்னிடம் தவறான முறையில் நடக்க முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்து பேசியதால் பணி ரீதியாக பல்வேறு வகையில் பழிவாங்கப்பட்டேன்.
இதுதொடர்பாக ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் ஆத்திரத்தில் தன்னை தண்டனை இட மாற்றமாக திருச்சிக்கு மாற்றப்பட்டேன்' என்பதாக தெரிவித்துள்ளார். ஆடியோவின் இறுதியில் இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கையால் தனக்கு மனஉளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணம் தோன்றுவதாகவும், இதனால் தனது பணியை ராஜினாமா செய்வதாகவும் பெண் காவலர் தெரிவித்துள்ளார். பெண் காவலர் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாற்றி வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு பாலியல் அசாம்பவிதங்கள் மற்றும் அதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், காவல்துறையில் பணியாற்றும் மூத்த பெண் காவலரே பாலியல் துன்புறுத்தல் காரணமாக பணியை ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பாலியல் தொல்லை மட்டும் இல்லை! நகை கொள்ளையிலும் ஞானசேகரன்! 120 சவரன் பறிமுதல்!
மேலும் படிக்க | இன்று திறக்கப்படும் முதல்வர் மருந்தகம்! 75% குறைந்த விலையில் மருந்துகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ