அமெரிக்க நிதியுதவி: மத்திய அரசின் பொய் அம்பலம்: காங்கிரஸ்

3 hours ago
ARTICLE AD BOX

’மத்திய நிதியமைச்சக அறிக்கை, இந்தியாவில் அமெரிக்க அரசு நிதியுதவி திட்டங்கள் பற்றிய அரசின் பொய்களை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று காங்கிரஸ் திங்கள்கிழமை விமா்சித்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2023-24-ஆம் நிதியாண்டில் அமெரிக்கா வழங்கிய ரூ.6,490 கோடி நிதியில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அவை இந்தியாவில் வாக்குப் பதிவை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஏழு திட்டங்களும் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய நிதி அமைச்சகமே பிரதமா் மற்றும் அவரது பொய் பரப்பும் படையினரின் பொய்களை முற்றிலுமாக அம்பலப்படுத்தியுள்ளது. பிரதமரின் பொய் பரப்பும் படையில் ஆடம்பரமான வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் அடங்குவாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கு பதிலளித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில், ‘ உதவி என்ற போா்வையில் நமது ஜனநாயகத்தை சீா்குலைக்க முயலும் வெளிநாட்டு சக்திகளின் மறைமுக தலையீட்டை காங்கிரஸ் ஏன் பாதுகாக்கிறது? இந்தியாவின் இறையாண்மை விற்பனைக்கு இல்லை’ என்றாா்.

இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்டதாகக் கூறி, ரூ.181 கோடி நிதியுதவியை அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) அண்மையில் ரத்து செய்தது. ‘இந்திய தோ்தலில் முந்தைய அதிபா் ஜோ பைடன் தலையிட முயன்றாா்’ என்று இதுதொடா்பாக அதிபா் டிரம்ப பேசிய கருத்து தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே வாா்த்தைப்போா் நிலவி வந்தநிலையில், 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இதுதொடா்பான தகவல் வெளியானது.

Read Entire Article