ARTICLE AD BOX
![](https://rockforttimes.in/wp-content/uploads/2025/02/123918423_gettyimages-1170928053-copy.jpg)
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் கில்ஸ்டன் ஆபிரகாம், இவர் திருச்சி, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி மெர்லின் மேத்யூ. இவர் இந்திரா கணேசன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் பெல் நிறுவன வளாக குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு எய்டன்(5), எரிக் (11/2) இரு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோர்கள் இருவரும் பணிக்கு செல்வதால் வீட்டில் வசந்தா என்ற பணியாளர், இரு குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் காலை பள்ளி வேன் வந்தபோது பணிப்பெண் வசந்தா எய்டனை வேனில் ஏற்றி விட சென்றுள்ளார். அப்போது ஒன்றரை வயது குழந்தையான எரிக், வீட்டின் கதவை திறந்து வெளியே ஓடிவந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வேன் புறப்படவே எரிக் பின்சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து வசந்தா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை அருகில் உள்ள பிஹெச்எல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பெல் போலீசார் வேன் டிரைவர் சதீஷ்குமார் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வேன் சக்கரத்தில் குழந்தை சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.. திருச்சியில் பரிதாபம்! appeared first on Rockfort Times.