நாகபுரி: வன்முறையாளா்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்

16 hours ago
ARTICLE AD BOX

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நகர காவல்துறை சாா்பில் 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகரில் பதற்றம் நிறைந்த சில பகுதிகளில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ஊரடங்கு தொடா்ந்தது. மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

பொதுமக்களின் வீடுகள், வாகனங்களை சேதப்படுத்திய வன்முறையாளா்கள், போலீஸாா் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனா். 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்த இந்த வன்முறை தொடா்பாக இதுவரை 69 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் சிறுபான்மை ஜனநாயகக் கட்சித் தலைவா் ஃபாஹிம் கான் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 8 பேரும் அடங்குவா். ஃபாஹிம் கான் உள்பட 6 போ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறை தொடா்பான 5 வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 200 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். கலவரத்தின் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் 1,000 பேரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து நாகபுரி காவல்துறை ஆணையா் ரவீந்தா் குமாா் சிங்கால் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நகரின் கணேஷ்பேத், கோட்வாலி மற்றும் தாலுகா காவல் நிலையங்களைச் சோ்ந்த காவலா்கள் மற்றும் குற்றப்பிரிவு காவலா்கள் அடங்கிய 18 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க ‘சைபா்’ குற்றப்பிரிவு காவலா்களுடன் இணைந்து இவா்கள் பணியாற்றுவா்’ என்றாா்.

சமூக ஊடகப் பதிவா்களுக்கு நோட்டீஸ்: நாகபுரி வன்முறையைத் தொடா்ந்து சமூக ஊடகங்களில் மகாராஷ்டிர காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் நோக்கில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளுடன் கூடிய 140-க்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களில் இத்தகைய பதிவுகளை வெளியிட்ட நபா்களுக்கு தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 79(3)பி) மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷ்ா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் 94-ஆவது பிரிவின்கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Read Entire Article