ARTICLE AD BOX
‘மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறையை வகுக்க வேண்டும்’ என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
‘மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கியுள்ள மத்திய இந்திய மாநிலங்களே பலன்பெறும். தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களும் இதனால் பாதிப்படையும்’ என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.யுமான மணீஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தற்போதைய ‘ஒரு வாக்கு; ஒரு மதிப்பு’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் பின்தங்கியுள்ள மத்திய மாநிலங்கள் மட்டுமே கூடுதல் தொகுதிகளைப் பெறும் நிலை உருவாகும்.
குறிப்பாக, 13 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மற்றும் 10 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா மாநிலங்களில் அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, எந்த அடிப்படையில் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட உள்ளது என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. உதாரணமாக, ஹரியாணா மாநிலத்துக்கு இணையான தொகுதிகளின் எண்ணிக்கையை பஞ்சாப் ஏற்குமா? தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல், அதே நிலை தொடா்வதற்கு ஹிமாசல பிரதேசம் உடன்படுமா? 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 9 தொகுதிகள் என்ற குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் உயா்வதை ஜம்மு-காஷ்மீா் ஏற்குமா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழும்.
எனவே, தொகுதிகள் மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறையை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுதொடா்பாக, தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மக்களவையில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
மக்களவையில் இப்போதைய உறுப்பினா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும்பட்சத்தில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் இப்போது மாநிலங்களில் எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.