ARTICLE AD BOX
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்புவோம் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (09-03-2025) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டர். இக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1
தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதல்வரின் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்
தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற திமுக தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான ஹிந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்னையைக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சருடைய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்னைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றுகூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 2
மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்
தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?
தீர்மானம் : 3
தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம்
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், தில்லியில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இன்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.