ARTICLE AD BOX
மதுரை: வருகிற 11 ஆம் தேதி தைப்பூச திருநாளையொட்டி, பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு அதிக அளவில் பயணம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பயணிகள் சிரமமின்றி சென்றடையும் வகையில் தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் உருவாக்கியுள்ளது.
மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போக்குவரத்து மண்டலங்களின் வழியாக, வழக்கமான வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக, பிப்ரவரி 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை 990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்தச் சிறப்பு பேருந்துகள் மதுரை, விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை, பொன்னமராவதி, தேனி, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து பழனி நோக்கி இயக்கப்படவுள்ளன. அதேபோல், திருப்பதி முடித்த பின்பு பக்தர்கள் ஊர்களுக்கு திரும்பவும் தேவையான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு வசதி - கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:
பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கவும், பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாதவாறு இருக்கவும், அரசு போக்குவரத்து கழகம் கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக முன்பதிவு செய்யும் வசதியை வழங்கியுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயணிகள் பாதுகாப்பான மற்றும் சீரான பயண அனுபவம் பெற, முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பயணச்சீட்டு ஆய்வாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை தமிழக போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சிங்காரவேலு தெரிவித்தார்.