ARTICLE AD BOX
தெலுங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு 29 விழுக்காட்டிலிருந்து 42ஆகவும், பட்டியல் சமூகத்தவருக்கான ஒதுக்கீட்டை15% ஆகவும், பழங்குடியினருக்கு 10% ஆகவும் உயர்த்தி அம்மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தெலுங்கானாவில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சாதி கணக்கெடுப்பை நடத்திய அம்மாநில காங்கிரஸ் அரசு, அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது. அடுத்தக்கட்டமாக பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கவும் தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது என்றும்
மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள இச்சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகு இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்; அதுவும் சாத்தியமானால் அது வரலாற்று சிறப்பாக அமையும் என்றும் இராமதாசு தன் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ” தமிழ்நாட்டிலும் ஓர் அரசு இருக்கிறது. சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்துவந்ததாக அடிக்கடிக் கூறிக் கொள்ளும்; அதற்கான விளம்பரங்களை வெளியிடும். ஆனால், சமூகநீதிக்காக ஒரு சிறு துரும்பைக்கூட அந்த அரசு கிள்ளிப்போடாது.
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தலாம்; அதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பலமுறை கூறியுள்ளன.
பிகாரிலும் தெலங்கானாவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. தமிழக ஆட்சியாளர்கள் இதைச் செய்யமாட்டார்கள். காரணம், அவர்கள் தூங்கவில்லை, தூங்குவதைப் போல நடிக்கிறார்கள். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும்.” என்றும் இராமதாசு கூறியுள்ளார்.