தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா ஆப்கானிஸ்தான்..?

3 days ago
ARTICLE AD BOX

கராச்சி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று முன் தினம் (19-02-2025) தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.

இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் என்பதால் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் வங்காள தேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தியது.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் ( 'பி' பிரிவு) பலப்பரிட்சை நடத்த உள்ளன. சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் குவித்தும் அவ்விரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்க அணி எழுச்சி பெற வேண்டிய சூழலில் இருக்கிறது.

தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 1998-ம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை வசப்படுத்திய அந்த அணி நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்றால் முதலில் இன்றைய ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க வேண்டியது முக்கியமாகும். பந்துவீச்சில் ககிசோ ரபடா, யான்சென், கேஷவ் மகராஜ் மிரட்டினால் தென் ஆப்பிரிக்காவின் கை ஓங்கும்.

சாம்பியன்ஸ் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கும் ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான், முகமது நபி, நங்கேயலியா கரோட், நூர் அகமது ஆகிய சுழற்பந்து வீச்சை தான் அதிகம் சார்ந்து இருக்கிறது. பேட்டிங்கில் குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இப்ராகிம் ஜட்ரன், குல்படின் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அணி கடந்த செப்டம்பரில் சார்ஜாவில் நடந்த ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது. அதே போல் அதிர்ச்சி அளிக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள் என்பதால், இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்:-

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), இப்ராகிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, நங்யால் கரோட்டி, ரஷித் கான், நூர் அகமது

தென் ஆப்பிரிக்கா:

டெம்பா பவுமா (கேப்டன்), ரியான் ரிக்கெல்டன், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் (வி.கீ.), மார்கோ ஜான்சன், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி


Read Entire Article