ARTICLE AD BOX
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டார். இதன் பேரில் விலை உயர்ந்த 35 மோப்ப நாய்கள் தமிழக காவல்துறைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி காவல்துறைக்கு நார்காட்டிக் (Narcotic Dog) மோப்ப நாய் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு மோப்பநாய், படையில் இணைக்கப்பட உள்ள பெல்ஜியன் மெயில்னோயா என்ற இனத்தைச் சேர்ந்த உயர் ரக மோப்ப நாய்க்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் நா.காமினி, 'சிலம்பு' எனப்பெயர் சூட்டியிருக்கிறார். தற்போது அதனை திருச்சி மாநகர மோப்ப நாய் படை பிரிவில் இணைத்தார்.
இதன்பின்னர், மோப்ப நாய் குறித்து அவர் தெரிவிக்கையில், "மேற்படி மோப்ப நாய்க்கு வருகின்ற ஜூன் முதல் நவம்பர் வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி முடிந்த பின்பு திருச்சி மாநகரில் மோப்ப நாய்ப்படை பிரிவில் சேர்க்கப்பட்டு போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்கவும், காவல்துறைக்கு பல்வேறு விதங்களில் உதவிடவும், மாநகரில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும் சிலம்பு மோப்ப நாய் பயன்படுத்தப்பட உள்ளது" என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.