தலைமை தேர்தல் ஆணையர் நியமன வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

5 days ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீர்த்துப் போகும் வகையில் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி குழுவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு மாற்றாக ஒன்றிய அமைச்சர் இடம்பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நிலுவையில் இருக்கும் சூழலில், புதிய சட்டத்தின் படி தேர்வு செய்யப்பட்டு புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நேற்று காலை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சூரியகாந்த் அமர்வில் ஒரு முறையீட்டை வைத்தார். அதில், “தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முக்கிய வழக்கு உள்ளதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார். அதனை கேட்ட நீதிபதிகள், பிற்பகலில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று பிற்பகல் மூன்று மணிக்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இரண்டாவது முறையாக மீண்டும் முறையீட்டை வைத்தார். அதில், “தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும். குறிப்பாக இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் என்பதால் தான் தொடர்ந்து முறையிடுகிறோம். மேலும் சில விஷயங்களுக்காக நீதிமன்றம் விதிவிலக்கு அளித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த்,” இந்த வழக்கை வேறு தேதியில் பட்டியலிடப்படுவது தொடர்பாக முடிவெடுக்கலாம் என தெரிவித்தார்.

The post தலைமை தேர்தல் ஆணையர் நியமன வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article