ARTICLE AD BOX
டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தும் பா.ஜ.க மற்றும் தி.மு.க அரசு குறித்து, டாஸ்மாக் பிரச்னையில் தி.மு.க - பா.ஜ.க - எதிரிகளைப் போல காட்டிக்கொண்டு புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் புதிய புகார் ஒன்றை கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்து முற்றுகையிட முயன்ற தமிழக பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது செய்ப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு புரவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, அதில் ரூ.1,000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாக செயல்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும், ஆனால், அது போன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
மாறாக, அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக பா.ஜ.க-வினர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை, நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க - தி.மு.க நாடகப் போக்கினை பார்த்தால் என்ன தெரிகிறது, ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு புரவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது. இதை அம்பலப்படுத்தி ஏற்கனவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
எனவே, ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்கும் எனில் டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல் நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் அவர்களின் வழியில் வலியுறுத்துகிறேன்” என்று த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.