ARTICLE AD BOX
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் (UNHRC) 58வது அமர்வின் ஏழாவது கூட்டம், ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்பியது. இதற்கு இந்திய அதிகாரிகள் தக்க பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தானின் சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர் டரார், ”காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.நாவின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறது. தொடர்ந்து, மனித உரிமைகளும் மீறப்படுகிறது. உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கூறினார்.
பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் க்ஷிதிஜ் தியாகி, தக்க பதிலடி கொடுத்தார். அவர், “பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து அவர், “யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த பகுதிகளில், இயல்பு நிலையை கொண்டுவருவதற்கான மக்கள் நம்பிக்கை பெற்ற மத்திய அரசின் நடவடிக்கைகளின் சாட்சியாகும். ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.
ஐ.நாவால் அனுமதிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணிச்சலுடன் புகலிடம் அளிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. அங்குதான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அவர்கள், எங்களுக்கு பாடம் எடுக்க அவசியம் இல்லை. இந்தியா மீதான அதன் ஆரோக்கியமற்ற கருத்துக்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது சொந்த மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச உதவிகளில் உயிர்வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு இந்த கவுன்சிலின் நேரத்தை, தொடர்ந்து வீணடிப்பது துர்நாற்றம் வீசுகிறது” என அவர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.