ARTICLE AD BOX
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருவிழாவைப் பொறுத்தவரை அம்மன் உத்தரவு வழங்கினால் மட்டுமே திருவிழா நடைபெறும். கடந்த 2023 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா நடத்த அம்மனிடம் பூ போட்டு உத்தரவு கேட்கப்பட்டது. தொடர்ந்து திருவிழா நடத்த அம்மன் உத்தரவு வழங்கியதை அடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மற்றும் வேட்டை (வேண்டுதலை) கிடா வழங்கும் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து அங்காளம்மன் , நடராஜர் மற்றும் பச்சாயி அம்மன் உற்சவர் தெய்வங்களை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள் தங்களது தோல் மீது வைத்து மடப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக எடுத்து கொண்டு மயானத்திற்கு சென்றனர். தேர் வந்தடைந்ததும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு , பக்தர்கள் வழங்கிய வேட்டைக்கிடாக்கள் அம்மனுக்கு பலி கொடுக்கப்பட்டது.
பலி கொடுக்கப்பட்ட கிடாக்கள் கோவில் வளாகத்திலேயே வெட்டி சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஒருபுறம் சுமார் 5000 கிலோ ஆட்டு கிடாக்கறிகள் மற்றும் சாதம் சமைக்கப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டு கொண்டு இருக்க, மறுபுறம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு கொண்டே இருந்தது.
இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததோடு அசைவ அன்னதான பிரசாதத்தை சாப்பிட்டு சென்றனர்.