ARTICLE AD BOX
உடலில் இருக்கக் கூடிய அதிகப்படியான உஷ்ணத்தைக் குறைப்பதற்கு அகத்திக் கீரை உதவுகிறது என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவையும் அகத்திக் கீரையில் நிறைந்திருக்கின்றன.
எனவே, எலும்பு தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் அகத்திக் கீரையை சாப்பிடலாம் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். குறிப்பாக, விரதம் இருப்பவர்கள் இந்த அகத்திக் கீரையை அவசியம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அல்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அகத்திக் கீரை மருந்தாக செயல்படுகிறது. அதன்படி, அகத்திக் கீரையை மிக்ஸியில் போட்டு அரைத்து 50 மில்லி லிட்டர் அளவிற்கு சாறு எடுக்க வேண்டும். இத்துடன் ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்த்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகலாம்.
இது தவிர இரத்தக் கொதிப்பு, இரத்த அழுத்தம் இருப்பவர்களும் அகத்திக் கீரையை கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். சீரகம் மற்றும் சோம்பு இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், அகத்திக் கீரை சாறு ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
காலை நேரத்தில் இதனை வெயிலில் வைத்து உலர்த்த வேண்டும். பின்னர், இதில் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து பொடியாக அரைக்க வேண்டும். இந்தப் பொடியை 5 கிராம் அளவிற்கு காலை நேரத்தில் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
இப்படி தொடர்ந்து எடுத்து வந்தால் அதிகப்படியான இரத்த அழுத்த பாதிப்புகள் குறையும் என மருத்துவர் நித்யா கூறியுள்ளார். இதேபோல், சரும பாதிப்புகளுக்கும் அகத்திக் கீரையை பயன்படுத்தலாம். அகத்திக் கீரை சாறுடன், எலுமிச்சை சாறு சேர்த்து சரும பாதிப்பு இருக்கும் இடத்தில் தடவலாம்.
எனினும், சித்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் அன்றைய தினம் அகத்திக் கீரையை சாப்பிட வேண்டாம் என மருத்துவர் நித்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.