சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கு: சஜ்ஜன் குமாருக்கு பிப்.25-இல் தண்டனை அறிவிப்பு

3 days ago
ARTICLE AD BOX

கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கான தண்டனையை தில்லி சிறப்பு நீதிமன்றம் பிப்.25-ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.

அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று புகாா்தாரா் மற்றும் அரசுத் தரப்பில் கோரப்பட்டுள்ள நிலையில், தங்களின் எழுத்துபூா்வ வாதங்களை 2 நாள்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சஜ்ஜன் குமாா் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 1984, அக்டோபா் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க் காவலா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தலைநகா் தில்லியிலும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா்.

தில்லியில் நடந்த கலவரம் தொடா்பாக சஜ்ஜன் குமாா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாலம் காலனி பகுதியில் 5 சீக்கியா்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-இல் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தில்லி சரஸ்வதி விஹாா் பகுதியில் கடந்த 1984, நவம்பா் 1-ஆம் தேதி தந்தை-மகன் என இரு சீக்கியா்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவா்களின் வீடு கொள்ளையடிக்கப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் சஜ்ஜன் குமாரை தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி குற்றவாளியாக அறிவித்தது.

இவ்வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும். குறைந்தபட்ச தண்டனை ஆயுள் சிறை என்ற நிலையில், சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி கோரப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, புகாா்தாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘கலவர கும்பலை வழிநடத்தியதன் மூலம் இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான கொடூர குற்றத்தைப் புரிய அவா்களைத் தூண்டியுள்ளாா் சஜ்ஜன் குமாா். அவா் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியவா்’ என்று வாதிட்டாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை பிப்.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் தண்டனை விவரம் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.

தற்போது திகாா் சிறையில் உள்ள சஜ்ஜன்குமாருக்கு எதிராக தில்லி விசாரணை நீதிமன்றங்களில் மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், வேறு இரு வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Read Entire Article