ARTICLE AD BOX
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இதில் துபாயில் நேற்று நடந்த 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ஹிரிடாயின் அபார சதத்தின் உதவியுடன் கவுரமான நிலையை எட்டியது. 49.4 ஓவர்கள் விளையாடிய வங்காளதேச அணி 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் பேட்டிங் செய்தபோது 9-வது ஓவரை வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 2-வது, 3-வது பந்துகளில் தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு உருவானது. இதனையடுத்து 4-வது பந்தை எதிர்கொண்ட ஜேக்கர் அலியின் பேட்டில் பந்து பட்டு ஸ்லிப்பில் நின்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் சென்றது. இருப்பினும் சுலபமான அந்த கேட்ச்சை ரோகித் சர்மா பிடிக்க தவறினார்.
ரோகித் சர்மாவின் இந்த தவறினால் சாம்பியன்ஸ் டிராபியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற அரிதான சாதனையை படைக்க வாய்ப்பிருந்த அக்சர் படேலின் வாய்ப்பு பறிபோனது.