ARTICLE AD BOX
காத்மண்டு,
நேபாளத்தின் ஜனக்பூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் புத்தா ஏர் என்ற விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது, விமானம் மேலே எழும்பி சென்றபோது, அதன் முன் சக்கரம் கழன்று கீழே விழுந்துள்ளது.
ஆனால், விமானிகளின் கவனத்திற்கு அது செல்லவில்லை. பயணத்தின்போது, அதற்கான அடையாளங்களை விமானமும் வெளிப்படுத்தவில்லை. இந்த சூழலில், திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் மாலை 5.10 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அப்போது, வழக்கம்போல் நடந்த ஆய்வின்போது, விமானத்தில் முன் சக்கரம் இல்லாதது தெரிய வந்தது. இதனால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால், உடனடியாக அவற்றை தேடும் பணி நடந்தது. இதில், ஜனக்பூர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே விமானம் திரும்பும் பகுதியில் முன் சக்கரம் கிடந்துள்ளது தெரிய வந்தது. அவற்றை ஊழியர்கள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
விமானம், முன் சக்கரம் இன்றி 25 நிமிடங்கள் பறந்தபோதும் அது எதுவும் தெரியாமல் விமானிகளும், பயணிகளும் மற்றும் விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். அதில் பயணித்த 62 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
இந்த விவரம் அவர்களுக்கு பயணத்தின்போது தெரியாமல் இருந்துள்ளது. இதனால், திகிலான நிமிடங்களை அவர்கள் கடந்து வந்துள்ளனர். பாதுகாப்பான பயணமும் அமைந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி அந்நாட்டு விமான போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.