ARTICLE AD BOX
சென்னை: பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘கூரன்’. கதையின் நாயகனாக ஒரு நாய் நடித்துள்ளது. முக்கிய வேடங்களில் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் நடித்துள்ளனர். மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். கனா புரொடக்ஷன்ஸ் சார்பில், விபி கம்பைன்சுடன் இணைந்து இயக்குனர் விக்கி தயாரித்துள்ளார்.
வரும் 28ம் தேதி ட்ரீம் வாரியர்ஸ் வெளியிடும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது: ஒரு படத்தில் எழுத்தாளனே கதாநாயகனின் குணச்சித்திரத்தை படைக்கிறான். ஆனால், நாம் நடிகர்களைத்தான் கொண்டாடுகிறோம். கதாநாயகன் அளவுக்கு இயக்குனர்களையும் கொண்டாட வேண்டும். ஒரு காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று தெரியும். அவன் பலாத்காரம், கொலை செய்வான், 10 பேரையாவது வெட்டுவான். இப்போது அதையெல்லாம் கதாநாயகர்களே செய்கிறார்கள். யார் வில்லன், யார் கதாநாயகன் என்றே தெரிவதில்லை.