ARTICLE AD BOX
சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். இப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருந்தார். அவர் கூறும்போது, ‘‘2019 ஆம் ஆண்டே ‘அமரன்’ படத்தின் கதையை கமல் சாரிடம் கூறினேன். அப்போது அவர் இப்படத்திற்கு தயாரிப்பாளர் கூட கிடையாது. ‘அமரன்’ படத்தின் கதையை கேட்டுவிட்டு கமல் சார், எனக்கு 30 வயசு இருந்திருந்தால் நானே இந்தப்படத்தில் நடித்திருப்பேன் என்றார். அந்தளவிற்கு இந்த படம் அவருக்கு மிகவும் பிடித்த படமாக அப்போதே இருந்தது’’ என்றார் ராஜ்குமார் பெரியசாமி. இந்நிலையில் கமல்ஹாசன் ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் தயாரிப்பு என செம பிசியாக இருக்கின்றார். ‘அமரன்’ திரைப்படத்தை தயாரித்த கமல் அடுத்ததாக ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு (அன்பு, அறிவு) இயக்கத்தில் தான் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கவுள்ளார். கேஹெச் 237 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.