ARTICLE AD BOX
கடலூர்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.
அந்த வகையில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கடலூருக்கு செல்ல உள்ளார்.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
12,226 பயனாளிகளுக்கு ரூ.164 கோடி மதிப்பீட்டில் நல உதவிகள்
இந்த விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 11,716 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டா உதவிகள் வழங்கப்படுகின்றன. 84 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, 61 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, உள்ளிட்ட 12,226 பயனாளிகளுக்கு ரூ.164 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
5,025 பயனாளிகளுக்கு ரூ.55.33 கோடி மதிப்பீட்டில் குடியிருப்புகள்
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 500 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் வழங்கப்படுகின்றன. பழங்குடியினர் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 225 பயனாளிகளுக்கும், புனரமைக்கப்பட்ட ஊரகக் குடியிருப்புகள் திட்டத்தின் மூலம் 4,300 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.5,025 பயனாளிகளுக்கு ரூ.55.23 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ரூ.107 கோடி மதிப்பில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற / ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 16,815 குழுக்களை சேர்ந்தவர்களுக்கு வங்கிக் கடன் ; வேளாண் பொறியியல் துறை சார்பில் 36 பயனாளிகளுக்கு பவர் டில்லர், 13 பயனாளிகளுக்கு பவர் வீடர், 1 பயனாளிளுக்கு கரும்பு அறுவடை இயந்திரம், 2 பயனாளிகளுக்கு உழுவை இயந்திரம் ; 2,121 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 516 பயனாளிகளுக்கு ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 44,690 பயனாளிகளுக்கு ரூ.387.66 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
அடிக்கல் நாட்டுதல்
முதல்-அமைச்சரின் கிராமச் சாலைகளின் திட்டத்தின் கீழ் 110 சாலைப் பணிகள், 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் முதலிய 133 புதிய திட்டப் பணிகளுக்கு ரூ.120.81 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை சார்பில், ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் 75 வகுப்பறைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
ரூ.173.39 கோடி மதிப்பீட்டில் 148.7 கி.மீ. நீளத்திற்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம், 26.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,409 குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம், ரூ.16.13 கோடி மதிப்பீட்டில் பண்ருட்டி பலா மதிப்புக்கூட்டு மையம் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த ரூ.384.41 கோடி மதிப்பீட்டிலான 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தல்
ரூ.72. 67 கோடியில், 9 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள், 61 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 4 சமுதாயக் கூடங்கள் முதலிய 225 முடிவுற்றத் திட்டப் பணிகள்; வணிகவரி பதிவுத்துறை சார்பில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம்
பொது நூலகத்துறை சார்பில் 10 பொது நூலகக் கட்டடங்கள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.21.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சி.என்.பாளையம் அரசு கால்நடை மருந்தகக் கட்டடம், சேத்தியாத் தோப்பு பால்பண்ணை முதலிய 8 புதிய திட்டப் பணிகள் முதலியவை திறந்து வைக்கப்படுகின்றன
ரூ.479 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ரூ.479 கோடி மதிப்பீட்டில் குறிஞ்சிப்பாடி, வடலூர், திட்டக்குடி முதலிய பகுதிகளைச் சேர்ந்த 6,68,000 பொதுமக்களுக்கு தினமும் 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
560 அடுக்குமாடி குடியிருப்புகள் & குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் திறப்பு
ரூ.57.96 கோடியில் கட்டப்பட்டுள்ள 560 அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் ஆகியவை திறந்து வைக்கப்படுகின்றன.
இவ்வாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடலூர் மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது, கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெறும் விழாவில் ரூ.384.41 கோடி மதிப்பீட்டிலான 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.704.89 கோடி மதிப்பீட்டிலான 602 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைப்பதுடன், ரூ.386.92 கோடி மதிப்பீட்டில் 44,689 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் நாளை (22.2.2025) வேப்பூர் வட்டம், திருப்பெயர் பகுதியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள "பெற்றோரைக் கொண்டோடுவோம்" மண்டல மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.