இந்தியா Vs வங்கதேசம்: இந்திய அணியின் 'மந்தமான' வெற்றிக்குக் காரணம் என்ன?

3 days ago
ARTICLE AD BOX

இந்தியா Vs வங்கதேசம்: இந்திய அணியின் 'மந்தமான' வெற்றிக்குக் காரணம் என்ன?

சுப்மான் கில், IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுப்மான் கில் இப்போட்டியில் 101 ரன்கள் சேர்த்தார்
5 நிமிடங்களுக்கு முன்னர்

துபையில் நேற்று (பிப். 20) நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் 2வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 229 ரன்கள் எனும் எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இந்திய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். இதில் குறைந்த இலக்கை கடைசிவரை போராடி சேஸ் செய்ததால் ரன்ரேட்டில் நியூசிலாந்தைவிட இந்திய அணி பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து 1.200 நிகர ரன்ரேட்டில் இருக்கும் நிலையில் இந்திய அணி 0.408 நிகர ரன்ரேட்டில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இருவர் முக்கியக் காரணமாக அமைந்தனர். ஒருவர் சதம் அடித்த சுப்மான் கில் (101), மற்றொருவர் முகமது ஷமி. இதில் பேட்டிங்கில் தொடக்க வீரராகக் களமிறங்கி கடைசிவரை களத்தில் இருந்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஷமி மைல்கல்

பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல், வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார்.

102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக்குடன் இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்த 200 விக்கெட்டுகளை வீழ்த்த ஷமி 5126 பந்துகளை வீசியுள்ளார். ஆனால், ஸ்டார்க் 5240 பந்துகளை வீசித்தான் 200 விக்கெட்டுகளை சாய்த்தார்.

வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்சித் ராணா இருவரும் பகிர்ந்துகொண்டனர். ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், ராணா 7.4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

முகமது ஷமி, IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி

வாய்ப்பை இழந்த வங்கதேசம், இந்தியா

சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் ஆட்டத்திலேயே இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த பல கேட்ச் வாய்ப்புகளையும், ஃபீல்டிங்கை தடுப்படுதிலும் கோட்டைவிட்டனர். வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், ஆடுகளம் காய்ந்து பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. ஆனால், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பவர்ப்ளே முடிவுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேசம்.

ஆனால், 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணிக்கு எதிராக எந்த விக்கெட்டுக்கும் எதிரான அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

வங்கதேச அணி ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடியிருந்தால் ஆட்டம் ஒருதரப்பாக முடிந்திருக்காது. வங்கதேச அணியும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர்.

இந்திய அணி தொடக்கத்தில் வங்கதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் பக்கம் வைத்திருந்தாலும், ஹிர்தாய்-ஜேக்கர் அலி கூட்டணியைப் பிரிக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர்.

தவ்ஹித் ஹிர்தாய், IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது

ஹாட்ரிக் வாய்ப்பைக் கெடுத்த ரோஹித்

அதுமட்டுமல்லாமல் அக்ஸர் படேலுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கைமேல் கிடைக்க வேண்டிய நிலையில் ரோஹித் சர்மா ஸ்லிப்பில் கேட்சை தவறவிட்டார். ரோஹித் சர்மா கோட்டைவிட்ட கேட்சால்தான் ஹிர்தாய், ஜேக்கர் அலி 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது.

அதேபோல, ஒருநாள் போட்டியில் 228 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிதானது. இந்த குறைவான ரன்களை சேஸிங் செய்வதற்கு 44 ஓவர்கள் வரை இழுத்துக்கொண்டு செல்லத் தேவையில்லை. குறைவான ரன்களை சேஸிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணியின் நிகர ரன்ரேட் மிகவும் குறைந்துள்ளது.

மேலும், 2023 உலகக் கோப்பைக்குப்பின், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட் இழக்காமல் இந்திய அணி இருந்தது இப்போட்டியில் தான். 2002ம் ஆண்டிலிருந்து இந்திய அணி 5வதுமுறையாக நடுப்பகுதிகளில் விக்கெட் வீழ்த்தாமல் விளையாடியது.

ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த ஸ்டெம்பிங் வாய்ப்பை கே.எல்.ராகுல் தவறவிட்டதால் ஜேக்கர் அலி தப்பித்தார். ஜேக்கர் அலி அப்போது 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணியின் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் நேற்று வழக்கதுக்கும் குறைவாக இருந்தது. அதிலும், ரோஹித் சர்மா 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை தவறவிட்டுள்ளார். நியூசிலாந்தின் டாம் லேதம் 11 கேட்சுகளையும் தவறவிட்டிருந்தார். ரோஹித் சர்மாவின் கேட்ச் பிடிக்கும் சதவிகிதம் 54.55% குறைந்துவிட்டது. 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்சுகளை மட்டுமே ரோஹித் சர்மா பிடித்துள்ளார்.

அதேசமயம், விராட் கோலி 156 கேட்சகளைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாருதின் சாதனையுடன் சமன் செய்தார். முதலிடத்தில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா (218) கேட்சுகளையும் பாண்டிங் 161 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

 விராட் கோலி, IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலி 156 கேட்சகளைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாருதின் சாதனையுடன் சமன் செய்தார்

கேட்ச் தவற விட்டதற்கு தண்டனை என்ன?

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் "இங்கு வந்து எந்த போட்டியும் விளையாடுவதற்கு முன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சேஸிங்கில் லேசாக சறுக்கியபோது கே.எல். ராகுல், கில் இருவருக்கும் அதிகமான அனுபவம் இருந்ததால், சேஸிங்கை எளிமையாக்கினர்.

இந்த ஆடுகளத்தில் ரன் சேர்ப்பது கடினம். அதிகமான புற்கள் இல்லை என்பதால் ஆடுகளம் மந்தமாக இருக்கும் என நினைத்தோம். இந்த சூழலுக்கு ஏற்றாற்போல் அணியினர் பழகிவிட்டனர். பந்துவீச்சும், பேட்டிங்கும் சிறப்பாக இருந்து. குறிப்பாக ஷமியின் பந்துவீச்சைப் பார்க்க நீண்டகாலம் காத்திருந்தோம். சிறப்பான பந்துவீச்சை அளித்தார்.

சுப்மான் கில் அற்புதமாக பேட் செய்தார். நான் அக்ஸர் படேலுக்கு கேட்சை தவறவிட்டு ஹாட்ரிக் வாய்ப்பை கெடுத்துவிட்டேன். இதற்கு தண்டனையாக அவரை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வேன். எளிமையான கேட்சுதான். அதை நான் பிடித்திருக் வேண்டும். ஹிர்தாய், ஜேக்கர் அலி அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆடுகளத்தைப் பற்றி நான் ஏதும் கூற முடியாது, 23-ம் தேதி ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்" எனத் தெரிவித்தார்

ரோஹித் சர்மா,  IND Vs BAN, CHAMPIONS TROPHY 2025

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "அக்ஸர் படேலுக்கு கேட்சை தவறவிட்டு ஹாட்ரிக் வாய்ப்பை கெடுத்துவிட்டேன்" - ரோஹித் சர்மா

பந்துவீச்சில் கடும் போட்டி

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். எக்கானமி ரேட்டும் 4.29 ஆக அதிகரித்தது. ஆனால், வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வீசி 3.75 எக்கானமி ரேட் வைத்திருந்தனர்.

அதேசமயம், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி, ராணா இருவரும் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆனால், வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 26.3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள்தான் எடுக்க முடிந்தது, 5.88 எக்கனாமி வைத்தனர்.

மந்தமான பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை துபை மைதானம் மந்தமானது எனக் கூறப்பட்டாலும் ரோஹித் சர்மா, சுப்மான் கில் கூட்டணி அருமையான தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளே ஓவர்களுக்குள் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா (41) விக்கெட்டை இழந்தது.

அனுபவ வீரர் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தநிலையில் கவர் திசையில் வந்த பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு, கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். லெக் ஸ்பின்னுக்கு கோலி இன்னும் திணறுகிறார் என்பது நேற்று தெளிவாகத் தெரிந்தது.

லெக் ஸ்பின் பந்துகளை எவ்வாறு கையாள்வது, ஃபீல்டிங் இடைவெளிக்குள் தட்டிவிடத் தெரியாமல் தவித்தார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் (15), அக்ஸர் படேல்(8) ரன்களில் பெவிலியன் திரும்பினர். கடைசி 3 விக்கெட்டுகள் 20 ஓவர்களில் 75 ரன்களுக்குள் இந்திய அணி இழந்தது.

69 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 125 பந்துகளில் சதம் விளாசினார். சுப்மான் கில் சதம் அடித்தபோதிலும் அதில் வேகமில்லை, கே.எல்.ராகுல் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி வெற்றி பெற்றாலும் அதன் சேஸிங் திறன் இன்னும் உத்வேகமெடுக்கவில்லை. 229 ரன்களை 35 ஓவர்களுக்குள் சேஸிங் செய்யாமல் 46 ஓவர்கள் வரை இழந்தனர். பவர்ப்ளேயில் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்தபோது, வங்கதேசம் அணி 39 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக ஆடிய வங்கதேச பேட்டர்கள் விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் இந்திய அணியை விட நடுப்பகுதி ஓவர்களில் கூடுதலாக 6 ரன்கள் சேர்த்தது.

நடுப்பகுதி ஓவர்களில் இந்திய பேட்டர்கள் ரன் சேர்க்கத் திணறினர். இந்திய பேட்டர்களை வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டிப்போட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article