ARTICLE AD BOX
“இந்தியும் தமிழும்தான் எங்கள் உயிர்…” என்ற கேப்சனுடன் தி.மு.க வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இதனால், ஆளும் தி.மு.க.-வுக்கும் சீமான் தலைமையிலான நா.த.க-வுக்கும் இடையே கடுமையான இருமுனைப் போட்டி நடக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இந்த இரு வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபாடுள்ளனர்.
இந்நிலையில், “இந்தியும் தமிழும்தான் எங்கள் உயிர்…” என்ற கேப்சனுடன் தி.மு.க வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், “தி.மு.க-வின் இரு மொழிக் கொள்கை என்றைக்கும் இருக்கும். இந்தியும், தமிழும் தான் எங்களுடைய உயிர்” என்று கூறுகிறார். இதன் அடிப்படையில் தி.மு.க வேட்பாளர் இந்தியும் தமிழும் தான் உயிர் என்று கூறியதாக பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணையப் பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ் மீட்டர் (newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
உண்மைச் சரிபார்ப்பு
சமூக வலைதள பக்கங்களில் வைரலாகும் தகவலின் உண்மையை கண்டறிவது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்துள்ளனர். அப்போது, பாலிமர் செய்தி ஊடகம் ஜனவரி 31 அன்று இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில் பேசும் வி.சி. சந்திரகுமார், “முதலில் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். தி.மு.க-வின் கொள்கை இருமொழிக் கொள்கை ஒன்று ஆங்கிலம் மற்றொன்று தமிழ். தமிழும் ஆங்கிலமும் தான் தி.மு.க-வில் இருமொழிக் கொள்கை. எந்த காலகட்டத்திலும் தி.மு.க இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறது. அதில், தெளிவாக இருக்கின்றோம்” என்று கூறுகிறார்.
தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தி மொழியில் தி.மு.க நோட்டீஸ் விநியோகம் செய்ததாக வெளியான செய்திக்கு பதிலளித்த அவர், “இந்த நோட்டீஸ் விஷயத்தைப் பொறுத்தவரை தி.மு.க இந்தி திணிப்பை அன்றும் இன்றும் என்றும் எதிர்க்கும். ஈரோட்டில் ஜவுளி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு கோத்தாரி குடும்பத்தை தெரியாமல் இருக்காது. இக்குடும்பத்தைச் சேர்ந்த லக்கி கோத்தாரி என்ற இளைஞர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக உள்ளார்.
அவர் வட இந்தியாவைச் சேர்ந்த வியாபாரிகளிடம் எங்களை அழைத்துச் சென்று வாக்கு கேட்கச் சொன்னார். அதன் பிறகு அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு நோட்டீஸ் தமிழில் இருப்பது புரியவில்லை என்று கூறவே அவர் தானாகவே முன்வந்து நாங்கள் தமிழில் கொடுத்த நோட்டீஸை இந்தியில் அச்சடித்து வட இந்திய மக்களிடத்திலேயே அவர் தனிப்பட்ட முறையில் கொடுத்துள்ளார். இதுதான் நடந்ததே தவிர வேறு எதுவும் சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. அ.தி.மு.க மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் தேர்தல் நேரத்தில் பரப்புரையின் போது வட இந்தியர்கள் வசிக்கக்கூடிய இந்திரா நகர் பகுதியில் இந்தியில் நோட்டீஸ் அடித்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பது வாடிக்கை” என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், “தி.மு.க-வின் இரு மொழிக் கொள்கை என்றும் இருக்கும். இந்தியும், தமிழும் தான் எங்களுடைய உயிர்” என்று கூறிவிட்டு, “மன்னிக்கவும் தவறாக கூறிவிட்டேன் தமிழும் ஆங்கிலமும் தான் எங்களுடைய உயிர்” என்று தெளிவுபடுத்துகிறார்.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலின் முடிவில், இந்தியும் தமிழும் தான் எங்களுடைய உயிர் என்று தி.மு.க வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும், உண்மையில் அவர் அவ்வாறாக கூறிவிட்டு தன் தவறை திருத்தி மீண்டும் ஆங்கிலமும் தமிழும் தான் எங்களுடைய உயிர் என்று கூறுகிறார் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.