ARTICLE AD BOX
கோவை,
கோவை ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா இன்று (26/02/2025) மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஈஷா மகாசிவராத்திரி விழா பக்தியின் மகாகும்பமேளா போன்று நடைபெறுகிறது என புகழாரம் சூட்டினார்.
மேலும் அவர் பேசுகையில் "சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன். இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
பிராயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மகாசிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, பக்தி, தன்னை உணர்தல் ஆகியவற்றிற்கான இடமாக இருக்கிறது. ஈஷா பல லட்சம் உயிர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலமாக நெறிப்படுத்தி, சரியான சிந்தனையை விதைத்து சரியான பாதையில் செல்ல உலகெங்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறது.
இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள். மிகுந்த ஞானம் கொண்டதும், அதே நேரத்தில் தர்க பூர்வமானதுமான முறையில் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். நம்முடைய சத்குருவை நான் வர்ணிக்க வேண்டுமென்றால் "ஒரு லட்சியத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிற ஞானி" என வர்ணிக்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருகிறார்கள்.
சத்குரு அவர்கள் மேற்கொண்ட மண் காப்போம் இயக்கத்தின் போது அவரோடு நானிருந்தேன். சத்குரு அவர்களே உங்களை பற்றி நான் பணிவோடு சொல்லி கொள்கிறேன், நீங்கள் இந்த பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
மகரிஷி திருமூலர் ஞானிகளின் அடையாளமாக, தீவிரமான தவத்தின் மூலம் சைவ மரபில் திருமந்திரம் எனும் 3,000 அற்புத பாடல்களை அருளியிருக்கிறார். அந்த வரிசையில் மகத்துவமான மற்றொரு உதாரணம் மகரிஷி அகத்தியர், அவர் சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய ஞானி.
தமிழ் பண்பாட்டில் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான இடம் உண்டு. ஆன்மிக வரலாற்றில் தமிழ் மொழியை குறிப்பிடாமல் பேச முடியாது. இந்த உன்னதமான தருணத்தில் தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது.
சத்குருவின் மகாசிவராத்திரியை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று நேரில் கலந்து கொண்ட பிறகு உலகித்திற்கே நான் சொல்ல விரும்புவது இது மிகவும் மகத்தான ஆச்சரியமான நிகழ்வு. சத்குரு இந்த மகாசிவராத்திரியை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படையாக கொண்டு ஞானத்தையும், அறிவியலையும் இணைக்கின்ற அற்புதத்தை செய்திருக்கிறார்" என்று அமித்ஷா கூறினார்
முன்னதாக ஈஷா யோக மையத்திற்கு மாலை வந்தடைந்த அமித்ஷா, சூர்ய குண்ட மண்டபம், நாகா சன்னதி, லிங்க பைரவி சன்னதி மற்றும் தியானலிங்கம் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்தார். தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத கிரியாவிலும் அமித்ஷா கலந்து கொண்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒடிசா மாநில கவர்னர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை மந்திரி எல். முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை மந்திரி சஞ்சய் ரதோட் ஆகியோர் பங்கேற்றனர்,