கோடையில் வரலாறு காணாத வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவு கொட்டி தீர்க்கும் கனமழை இவற்றுக்கு காரணமாக கூறப்படும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு பற்றிய கவலைகள் மற்றும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இந்திய நுகர்வோர் மத்தியிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் (EVs) பிரபலமடைந்து வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் எரிபொருள் விலையேற்றம் மக்களின் கவனத்தை மின்சார வாகனங்கள் பக்கம் திரும்ப வைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்கள் மார்கெட்டிற்கு வந்துள்ளன.

இருப்பினும், ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் கார்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஹேச்பேக், செடான், எஸ்.யூ.வி, கூபே வரை பல்வேறு ரகங்களில் எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனையாகின்றன. இருப்பினும், இன்னும் சில நாட்களில் எலான் மஸ்கின் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்புள்ளது. இந்திய சந்தையில் டெஸ்லா நுழைந்த பிறகு, ஆட்டோமொபைல் துறையில் போட்டி தீவிரமடையவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விலை சற்று கூடுதலாகவும் இருக்கிறது.
இந்தநிலையில் மின்சார வாகனங்களின் (EV) விலைகள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை )32வது கன்வர்ஜென்ஸ் இந்தியா மற்றும் 10வது ஸ்மார்ட் சிட்டிஸ் இந்தியா எக்ஸ்போவில் உரையாற்றிய கட்கரி, 212 கி.மீ டெல்லி-டேராடூன் அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையின் கட்டுமானப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவடையும் என்றார். மேலும் இன்ன்றும் ஆறு மாதங்களுக்குள் நாட்டில் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக மின்சார வாகனங்களின் (EV) விலைகள் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
இறக்குமதி மாற்று (import substitute), செலவு-செயல்திறன்(cost-effectiveness), மாசு இல்லாத தொழில்துறை (pollution-free) மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவை மத்திய அரசின் கொள்கை என்று கூறிய நிதின் கட்கரி, இந்தியாவை மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்ற, அதற்கேற்ப நாட்டின் உட்கட்டமைப்பு (infrastructure) துறையை மேம்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டார். மேலும், நல்ல சாலைகளை அமைப்பதன் மூலம், நமது தளவாடச்( logistics) செலவைக் குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறிய அவர், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து மாற்றத்திற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும். "மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட பெருந்தொகை விரைவான போக்குவரத்து திட்டத்தில் (mass rapid transport on electricity) பணியாற்றி வருவதாகவும், சாலை கட்டுமான செலவைக் குறைக்க புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபுடிப்புகளை ஊக்குவிக்க தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.