ARTICLE AD BOX
செய்தியாளர்: ஆர்.மோகன்
தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் நாட்டவர்கள் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து அருளாசி பெற்றனர். தமிழ் மொழி, ஆன்மிகம், கலாசாரம் குறித்தும், சித்தர்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இருந்து 40 பேர் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஜப்பான் நாட்டுக்குச் சென்று கடந்த 32 ஆண்டுகளாக வியாபாரம் நடத்திவரும் டாக்டர் கோபால் சுப்பிரமணியம் என்பவரின் ஏற்பாட்டில், ஜப்பானிய ஆன்மிக குரு கூனிக்கோ, கவாஷீமா ஆகியோர் தலைமையில் இக்குழுவினர் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று தருமபுரம் ஆதீனத் திருமடத்துக்கு இக்குழுவினர் வந்தனர்.
இதையடுத்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றனர். பின்னர், அவர்கள் தருமபுரம் ஆதீனக் கோயில்களான வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர், திருபுவனம் கோயில்களுக்கு வழிபாட்டுக்காக புறப்பட்டுச் சென்றனர்.