ARTICLE AD BOX
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் தேடுதல் சோதனையில் ஈடுபட்டது. ஒரே நாளில் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் இடங்களிலும் அமைச்சர் தொடர்புடைய இடங்களிலும் தேடுதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சற்று முன் தன் சமூக ஊடகப் பக்கங்களில் இதுகுறித்து இடுகை ஒன்றைப் பதிந்துள்ளார்.
அதன் விவரம்:
” தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு முக ஸ்டாலின்?
ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.
பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். வெட்கக்கேடு!” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.