ARTICLE AD BOX
பெரிய ரெஸ்டாரண்ட் மற்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சென்றால் அங்கு சாப்பிடுவதற்கு முன்பே சூப் தருவது வழக்கமான ஒன்றாகும். சூப்களில் சிக்கன், மட்டன், வெஜ் என பல வகைகள் உண்டு. ஆனால் அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு சூப் என்றால் அது காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் காய்கறி சூப் தான். நாம் வீடுகளில் செய்யும் சூப் ரெஸ்டாரண்டில் செய்யப்படும் சூப்களின் சுவையை தருவதில்லை. இனி அந்த பிரச்சனை இருக்காது. வீட்டிலேயே சுவையாக ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வெஜிடபுள் சூப் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
ஒரு டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு
2 கிராம்பு
2 ஏலக்காய்
ஒரு சிறிய துண்டு பட்டை
ஒரு சிறிய அளவிலான இஞ்சி துண்டு
5 பல் பூண்டு
ஒரு கைப்பிடி அளவு புதினா
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி
கால் கப் சின்ன வெங்காயம்
2 பச்சைமிளகாய்
2 கேரட்
சிறிதளவு பீன்ஸ்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்
சிறிய அளவிலான புளி
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
தேவையான அளவு எண்ணெய்
தேவவையான அளவு உப்பு
சூப்பில் கலக்கும் பொடி செய்ய
ஒரு டீஸ்பூன் சோம்பு
ஒரு டீஸ்பூன்மிளகு
அரை டீஸ்பூன் சீரகம்
மேலும் படிக்க | சிக்கனை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!
செய்முறை
முதலில் தேவையானப் பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதற்கு துவரம்பருப்பை வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை சிறிது நீரில் ஊற வைத்து ஒரு கப் அளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், புதினா, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் இரண்டையும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதை கரண்டியால் நன்கு மசித்துவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதில் நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அதில் வேகவைத்து மசித்த காய்கறிகளை சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து அதில் கரைத்து வைத்த புளி தண்ணீரை ஊற்றவும். புளி தண்ணீருடன் மேலும் 5 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தப் பிறகு பொடித்து வைத்திருக்கும் தூள் வகைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து வரும் பொழுது அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். சூப் சிறிது ஆறியதும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பரிமாறவும். சுவையான வெஜிடபுள் சூப் தயார்.

டாபிக்ஸ்