ARTICLE AD BOX
G.V.Prakash: தமிழ் சினிமாவில் தான் இசையமைத்த முதல் படத்திலேயே அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்து, இன்று தன் 100வது படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் இசையமைப்பதுடன், தற்போது சினிமாவில் கதாநாயாகனாகவும் முத்திரை பதித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான நாச்சியார், சர்வம் தாள மயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர் போன்ற படங்களில் தன் தனித்துவமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்.
கிங்ஸ்டன் படம்
இவர் தற்போது, கிங்ஸ்டன் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் பேனரின் கீழ் ஜி.வி. பிரகாஷ் குமாரே தயாரித்துள்ளார். கமஷ் பிரகாஷ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் பேச்சுலர் படத்திற்கு பின் ஜி.வி. பிரகாஷுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் திவ்ய பாரதி. மேலும் இந்த படத்தில் இளங்கோ குமரவேல், சேதன், ஆண்டணி போன்றோரும் நடித்துள்ளனர்.
ஜி.வி. 25வது படம்
கடல் சார்ந்த கதைக்களத்துடன் இந்தப் படம் அமைந்துள்ளது. இது ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியாகும் 25வது படம் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில், கிங்ஸ்டன் படத்தின் புரொமோஷனுக்காக படத்தின் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷும், திவ்ய பாரதியும் இந்தியாகிளிட்ஸ் தமிழுக்கு பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டியில், ஜி.வி. பிரகாஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டபோது, அதற்கான பதிலையும் அவர் வெளிப்படையாக கூறினார்.
என் மேல் கோவப்பட்டனர்
ஜி.வி. பிரகாஷ் திவ்ய பாரதியுடன் பேச்சுலர் படம் நடித்த சமயத்தில் தான் சைந்தவியுடனான விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார். இதைப் பார்த்த பலரும் இவர்களது பிரிவுக்கு திவ்ய பாரதி தான் காரணம் என பலரும் கூறி வந்தனர். இதைக் கேட்கும் போது எப்படி இருந்தது என திவ்ய பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், " இவர்கள் இருவரும் விவாகரத்து அறிவித்த கோவத்தை மக்கள் எல்லாம் என் பக்கம் திருப்புவார்கள் என நான் எதிர்பாக்கவே இல்ல.
எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல. யார் என்ன பண்ணாலும் கடைசியில ஒரு பொன்னோட கேரக்டர எப்படி கேள்வி கேக்குறாங்கன்னே தெரியல. அதெல்லாம் ரொம்ப வருத்தமா இருந்தது என்றார்.
திவ்யாவோட டேட்டிங்?
அப்போது குறுக்கிட்ட ஜி.வி. பிராகஷ், இப்போ கூட நாங்க ரெண்டு பேரும் டேட் பண்ணிட்டு இருக்கோம்ன்னு சொல்றாங்க. அதெல்லாம் எதுவும் இல்ல. நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ் அவ்ளோ தான். நான் இவங்கள ஷூட்டிங் முடிச்சு ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் பாக்குறேன். ஒருவேளை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச படம் அதோட போஸ்டர்ஸ், பாட்டு, சீன்ஸ் எல்லாம் அவங்கள அப்படி யோசிக்க வச்சிருக்கும். அது மக்களோட சிந்தனை அதை நாம ஒன்னும் பண்ண முடியாது. ஆனா நாங்க பிரண்ட்ஸ் அவ்ளோ தான் எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல என விளக்கம் அளித்தார்.
சைந்தக்கான மரியாதை இருக்கு
அத்தோடு, சைந்தவிக்கும் எனக்கும் விவாகரத்து ஆகியிருந்தாலும், நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும் போது இருந்தே ப்ரண்ட்ஸ். அந்த நட்பு இன்னைக்கும் தொடருது. நாங்க ரெண்டு பேரும் தொழில் ரீதியா இன்னைக்கும் ஒன்னா சேர்ந்து வேலை செய்வோம். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கான மரியாதை ஒருத்தர் கொடுத்துட்டு தான் இருக்கோம். என் மகள் வார நாட்கள்ல சைந்தவியோடும், லீவ் நாள்ல என்னோடும் இருப்பாங்க என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்