68 – வினை செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

6 hours ago
ARTICLE AD BOX

68 – வினை செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
        தாழ்ச்சியுள் தங்குதல் தீது

கலைஞர் குறல் விளக்கம்  – ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.

672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
        தூங்காது செய்யும் வினை

கலைஞர் குறல் விளக்கம்  – நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
        செல்லும்வாய் நோக்கிச் செயல்

கலைஞர் குறல் விளக்கம்  – இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

674. வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
        தீயெச்சம் போலத் தெறும்

கலைஞர் குறல் விளக்கம்  – ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

675. பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
        இருள்தீர எண்ணிச் செயல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு. அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

676. முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
         படுபயனும் பார்த்துச் செயல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்று வதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

677. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
         உள்ளறிவான் உள்ளங் கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – ஒரு செயலில் ஈடுபடுகிறவன். அச் செயல்குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

678. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
        யானையால் யானையாத் தற்று

கலைஞர் குறல் விளக்கம்  – ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
        ஒட்டாரை ஒட்டிக் கொளல்

கலைஞர் குறல் விளக்கம்  – நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

680. உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்
        கொள்வர் பெரியார்ப் பணிந்து

கலைஞர் குறல் விளக்கம்  – தம்மை விட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

Read Entire Article