ARTICLE AD BOX
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (பிப் 21) கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
முன்னதாக, வழிநெடுகிலும் காத்திருந்த பொதுமக்கள், முதலமைச்சர் ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக, மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, ரூ. 1476.22 கோடி மதிப்பில் நிறைவு பெற்ற பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும், 178 புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இவை மட்டுமின்றி ரூ. 387 கோடி மதிப்பில் 44,689 பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனிடையே, கடலூர் மாவட்டத்திற்கென பிரத்தியேகமான 10 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன்படி, "முட்லூரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை உள்ள இருவழிச்சாலை, 4 வழிச்சாலையாக ரூ. 50 கோடியில் மேம்படுத்தப்படும். கெடிலம் ஆற்றில் ரூ. 36 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வெலிங்டன் எதிரில் கரைகளை பலப்படுத்தி, வாய்க்காலை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை ஆற்றில் ரூ. 58 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்" என அவர் அறிவித்துள்ளார்.