ARTICLE AD BOX
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மீது ஒரேசமயத்தில் 260 டிரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது ரஷ்யா உக்ரைனை மிகப்பெரிய ஒற்றை ட்ரோன் தாக்குதலால் தாக்கியுள்ளது. 267 ரஷ்ய ட்ரோன்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டு தாக்குதல் நடைபெற்றதாக உக்ரைனின் விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவிகின்றனர்.
உக்ரைன் முழுவதும் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட குறைந்தது 13 பகுதிகளில் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில் ரஷ்யா ஏவிய 260 ட்ரோன்களில் 140 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலோன்ஸ்கி, “ரஷ்யா ஒரே இரவில் 200க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளது. இது போரின் மிகப்பெரிய தாக்குதல்” என ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை கண்டித்த அவர், உக்ரைனின் நட்பு நாடுகளிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது பயங்கரமான தாக்குதல் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு அதிகாரிகள் இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த ஆலோனைக் கூட்டத்தில் உக்ரைன் சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை.
இதனிடையே, ”தங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது” உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரிதான் ஜெலன்ஸ்கி. அவர் வேகமாக நகர்ந்துவிடுவது நல்லது. இல்லையெனில், அவருக்கென ஒரு நாடுகூட இருக்கப் போவதில்லை” என எச்சரித்திருந்தார். இதற்கு ஜெலன்ஸ்கி, “ரஷ்யா உருவாக்கிய தவறான தகவல் உலகத்தில் ட்ரம்ப் வாழ்கிறார். புதினை தனிமையில் இருந்து விடுவிக்க உதவுகிறார். இது உக்ரைனுக்கு சாதகமானதல்ல” எனத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தப் பதிலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ”உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.