ARTICLE AD BOX
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணி அமைக்க ரவீந்திரன் துரைசாமி கணித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ராமதாசுக்கு பயந்தே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் யார் யார் எந்த கூட்டணியில் இடம் பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி தொடருமா? இல்லை புதிய கூட்டணி உருவாகுமா? விஜய் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்? என்பது தொடர்பாக இப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான ரவீந்திரன் துரைசாமி 2026 தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

அதாவது எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது பெரும் தவறு. அவர் ராமதாசுக்கு பயந்தே போட்டியிடவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் வன்னியர்களின் பெல்ட்டில் ராமதாஸின் பாமக படுதோல்வி அடைந்தது. ராமதாஸின் எதிர்ப்பையும் மீறி வன்னிய தலைவர்கள் பலர் அதிமுகவை ஆதரித்தனர். ஆனாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கோழைத்தனமாக போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார்.

ஆகவே 2026 தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணி வைக்க வேண்டும். இரண்டும் கூட்டணி வைத்தால் தான் வன்னியர் வாக்குகளை பெற முடியும். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்காமல் போனால் வன்னியர் மாவட்டங்களில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். பெருபான்மையான வன்னியர் தொகுதியில் இரண்டாவது இடத்தைக் கூடப் பெற முடியவில்லை. விழுப்புரம், சேலத்தில் டெபாசிட்களை இழந்தது. சிதம்பரம் தொகுதியில் தனது கூட்டணி கட்சிகளுக்கு டெபாசிட் உறுதி செய்யத் தவறிய பாமக, கள்ளக்குறிச்சியில் நான்காவது இடத்தைப் பிடித்தது. பாஜக கூட்டணி பாமகவை தக்க வைப்பதற்கு முன்பே, அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். ராஜ்யசபா போன்றவற்றில் பாமகவிற்கு அதிக இடங்களை வழங்க வேண்டும்.

விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடாததன் மூலம் சீமானிடம் அதிமுக வாக்குகளை இழந்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் முழு வன்னியர் பகுதியிலும் வன்னியர் அல்லாதவர்களிடமும், முழு கொங்கு பெல்ட்டிலும் கொங்கு அல்லாத வேளாளர்களிடமும் அதிமுகவும், ஈபிஎஸ்ஸும் நம்பிக்கையை இழந்துள்ளது. இந்த வாக்குகளை சீமானின் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. சீமான் ஒரு இந்து நாடார் வேட்பாளரை வெளிப்படையாக அங்கீகரித்தார்.