ARTICLE AD BOX
நாட்டுக்கோழி குழம்பை ஒருவாட்டி இப்படி மசாலா அரைச்சு செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்...
Nattukozhi Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் நாட்டுக்கோழியை அடிக்கடி வாங்குவீர்களா? எப்போது நாட்டுக்கோழி வாங்கினாலும் ஒரே சுவையில் தான் குழம்பு செய்து, வறுவல் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை நாட்டுக்கோழி வாங்கினால், அதற்கு தனியாக ஒரு மசாலாவை அரைத்து, குழம்பு செய்யுங்கள்.
இப்படி குழம்பு செய்யும் போது, அந்த குழம்பின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். மேலும் இது நீங்கள் இதுவரை சுவைத்திராத ருசியிலும் இருக்கும். இப்படி நாட்டுக்கோழி குழம்பு செய்தால், அது சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு அரைச்சுவிட்ட நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட நாட்டுக்கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
* சின்ன வெங்காயம் - 100
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/4 கப்
குழம்பிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* நாட்டுக்கோழி - 3/4 கிலோ
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மிளகு, சீரகம், சோம்பு, மல்லி, ஏலக்காய், கிராம்பு, பட்டை
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கசகசாவை சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளியை சேர்த்து,
உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தேங்காயை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் நாட்டுக்கோழியை சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து, 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கோழியில் இருந்து நீர் விட்டு வந்ததும், அதில் குழம்பு மிளகாய் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி,
குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை
மூடி 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.