ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன; ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சங்க காலம் முதலே பெண் இனத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாள்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில்கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன.” என்று தெரிவித்துள்ளார்.
“இந்த ஆட்சியில் தமிழ்நாடு இப்படி சிக்கிச் சீரழிந்துவருவது குறித்து எந்தக் கவலையும் இல்லாத ஸ்டாலின், ‘பெண்களுக்குப் பாதுகாப்பு’ என வாய்ச்சவடால் மட்டும் பேசினால் போதுமா? தி.மு.க. ஆட்சி நீடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது. இனியாவது ஸ்டாலின் மாடல் அரசு விழித்துக்கொண்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.” என்றும் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.