ARTICLE AD BOX
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாதக வேட்பாளரை ஆதரித்து பேசும்போது, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வெடிகுண்டு வீசுவதாக கூறியிருந்தார். புகாரையடுத்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனில் 20ம் தேதிக்குள் (நேற்றுக்குள்) ஆஜராகி விளக்கம் தரக்கோரி, கருங்கல்பாளையம் போலீசார் சென்னையில் சீமான் வீட்டிற்கு கடந்த 17ம் தேதி நேரில் சென்று, சம்மன் வழங்கினர். ஆனால், கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சீமான் நேற்று வரவில்லை. அவரது வழக்கறிஞர் நன்மாறன் ஆஜராகி, சீமானது கடிதத்தை இன்ஸ்பெக்டரிடம் வழங்கினார். சீமான் மீது 80க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை செய்ய டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. டிஜிபி முடிவு எடுக்கும் வரை விசாரணையை ஒத்தி வைக்க கோரி மனு கொடுத்துள்ளோம் என்று வக்கீல் நன்மாறன் தெரிவித்தார்.
The post வெடிகுண்டு பேச்சு சீமான் போலீசில் ஆஜராகவில்லை appeared first on Dinakaran.