<p style="text-align: justify;">விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) நான்கு வழிச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தற்காலிகமாக பேட்ச் ஒர்க் செய்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையின் தஞ்சாவூர்-கும்பகோணம்-சோழபுரம் பகுதி பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதால் இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால தாமதமாகி வந்திருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை தற்போது முன்னேற்றம் கண்டு திறப்புவிழாவுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் டெல்டா மாவட்ட பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.<br /> <br />இந்தநிலையில், விக்கிரவாண்டியிலிருந்து பின்னலுார - சேத்தியாதோப்பு வரை வி.கே.டி., சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரர் நியமனம் செய்யாமல் தற்காலிகமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள டில்லியில் நகாய் அதிகாரிகள் கடந்த 7ம் தேதி டெக்னிக்கல் டெண்டரில் புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்துள்ள நிலையில் , பணிக்கான நிதி (பட்ஜெட்) டெண்டர் வரும் 26ம் தேதி திறக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த பெஞ்சல் புயலால் பாதித்து குண்டும், குழியுமான இடங்களில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டுள்ளது.<br /> </p>
<p style="text-align: justify;">பிரதான சாலையில் மரண குழிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் குறிப்பாக விக்கிரவாண்டியிலிருந்து கோலியனுார் கூட்ரோடு வரை உள்ள 13 கி.மீ., துார சாலையில் பெரிய பாதிப்புகளை மட்டும் பேட்ச் ஒர்க் செய்துள்ளனர். ஆனால், சாலையில் ஆங்காங்கு உள்ள பள்ளங்களால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி பலத்த காயமடைந்து வருகின்றனர். பெரிய அளவு பாதிப்புகளை சரி செய்யும் போதே சிறிய அளவிலான குண்டு, குழிகளை அடைத்திருந்தால் விபத்துகளின்றி எளிதாக பயணிக்க முடியும். கப்பியாம்புலியூர் அடுத்த மேல்பாதி கிழக்கு பகுதியில் உள்ள சாலைகளின் நடுவே இருந்த சிறிய அளவிலான பள்ளங்கள் தற்போது பெரிய பள்ளங்களாக ஏற்பட்டு மரண பயத்தை உருவாக்கியுள்ளது.</p>
<p style="text-align: justify;">வி.கே.டி., சாலையில் பேட்ச் ஒர்க் செய்ய நகாய் ஏற்கனவே 7 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில் இது போன்ற சிறிய குண்டு குழிகளை அடைக்காமல் விட்டது ஏதோ கடமைக்கு சீரமைத்தது போல் உள்ளது. அதே போன்று சாலைகளில் இருக்கும் சிறு குறு பாலங்களுக்கு பாதுகாப்பு தடுப்பு சுவர் கட்டப்படாமல் உள்ளது. எனவே, நகாய் அதிகாரிகள், வி.கே.டி., சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை முழுமையாக பேட்ச் ஒர்க் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>