ARTICLE AD BOX
சேலம்: சேலம் புதிய பஸ் நிலையத்தில் 2 யானை தந்தத்தை ரூ.1கோடிக்கு விற்க முயன்ற 8பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு யானை தந்தம் கடத்தி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படையினர், சந்தேகப்படும்படி இருந்த 2பேரை பிடித்து விசாரித்தினர். அதில் அவர்கள் யானை தந்தத்தை விற்க வந்ததும், யானை தந்தத்தை கருமந்துறையில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து வனத்துறை தனிப்படையினர் கருமந்துறைக்கு சென்று ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 தந்தத்தை பறிமுதல் செய்தனர்.
இவற்றை விற்க முயற்சித்தது கருமந்துறையைசேர்ந்த முரளி (28),சங்கர் (35), பாலு (31), சக்திவேல்(48), ஜெகநாதன் (46), ராஜீவ்காந்தி(34), கிருஷ்ணன்(76), இளங்கோவன்(56) என்பதும், இந்த கும்பல் யானை தந்தத்தை வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1கோடிக்கு விற்க முயன்றதும் விசாரணையில் தெரிந்தது. யானை தந்தத்தை கேரளாவில் இருந்து முரளி, கடந்த வாரம் ரயிலில் கடத்தி வந்ததும், சேலம் ஜங்சனில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் யானை தந்தத்தை கருமந்துறைக்கு கடத்தி சென்று பதுக்கி வைத்துள்ளார். பிடிபட்ட 8பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வனத்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 7செல்போன், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ரூ.1 கோடிக்கு யானை தந்தம் விற்க முயன்ற 8 பேர் கைது appeared first on Dinakaran.